காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள குமரக்கோட்டம் முருகன் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் (மே 8) இரவு விநாயகர் உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து விழா 10 நாள்களுக்கு நடைபெறுகிறது. விழாவையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன. விழாவில் தினம்தோறும் சுப்பிரமணிய சுவாமி பல்வேறு வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். காலை நிகழ்ச்சிகளில் சூர்யபிரபை, தேவேந்திர மயில் வாகனம், திருத்தேர், மான் வாகனம் போன்ற வாகனங்களில் ஒவ்வொரு நாளும் வந்து பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலிக்கிறார்.
இரவு நிகழ்ச்சிகளில் ஆடு வாகனம், அன்ன வாகனம், கேடயம், யானை வாகனம், சந்திர பிரபை, குதிரை வாகனம், மாவடி சேவை, சூரன் மயில் வாகனம் போன்ற வாகனங்களில் தோன்றி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின் தொடக்க நிகழ்ச்சியான கொடியேற்றத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருக்கல்யாணம்: விழாவின் முக்கிய நிகழ்வான வள்ளி திருக்கல்யாணம் மே 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறுகிறது. இந்நிகழ்வில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். விழாவையொட்டி கோயில் வளாகத்தில் உள்ள குமரன் கலை அரங்கில் நாள்தோறும் இரவு 7 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால், உதவி ஆணையர் ரமணி, செயல் அலுவலர் தியாகராஜன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்துவருகின்றனர்.