×

திருப்போரூரில் பட்டப்பகலில் வீட்டை உடைத்து 25 சவரன், பணம் கொள்ளை

திருப்போரூர் : திருப்போரூரில் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை, ரொக்கம் ரூ.10 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர். திருப்போரூர் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள புதுத்தெருவினைச் சேர்ந்தவர் சேகர் (59). இவரது வீட்டின் தரை தளம் மற்றும் முதல்தளத்தில் வாடகைக்கு குடியிருக்கின்றனர். இரண்டாம் தளத்தில் சேகர் குடும்பத்துடன் வசிக்கிறார். பைனான்சியரான சேகரின் மனைவி ரேணுகா மற்றும் குழந்தைகள் கோயம்புத்தூர் சென்று விட்டனர். சேகர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். நேற்று காலை சுமார் 10 மணியளவில் உறவினர் ஒருவரின் இறப்பு சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சேகர் வீட்டைப் பூட்டி விட்டு சென்றிருந்தார். பகல் 12 மணியளவில் திரும்பி வந்தபோது வீட்டின் பிரதான வாயிற் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

அதிர்ச்சியுடன் உள்ளே சென்று பார்த்த போது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 25 சவரன் தங்க நகைகள், ரூ. 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து திருப்போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். அவரது வீட்டிற்கு வந்து செல்லும் நபர்கள், வீட்டில் வேலை செய்பவர்களின் விபரங்களை சேகரித்தனர். மேலும் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவினை ஆய்வு செய்தபோது மர்மநபர் ஒருவர் ஹெல்மட் அணிந்தபடி வீட்டை கண்காணிப்பதும், கட்டை பையில் இரும்பு ராடுகளுடன் வீட்டினுள் செல்வதும் பதிவாகி இருந்தது. இதனடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகின்றனர்.

Tags : house ,
× RELATED ஏட்டு வீட்டில் திருடிய 2 பேரை காவலில் எடுத்து விசாரணை