திருமலை, மே 10: ஆந்திர மாநில சுகாதாரத்துறை அமைச்சரை ராஜினாமா செய்ய கவர்னர் உத்தரவிட்டநிலையில், அவர் தனிப்பிரிவு செயலாளரிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். விசாகப்பட்டினம் மாவட்டம், அரக்கு தொகுதி தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏவாக இருந்த கிடாரி சர்வேஸ்வரா ராவ் கடந்தாண்டு மாவோயிஸ்ட்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு அவரது மகன் கிடாரி ஸ்ராவனை சுகாதாரத்துறை அமைச்சராக முதல்வர் சந்திரபாபு நாயுடு நியமித்தார். இதையடுத்து கடந்தாண்டு நவம்பர் மாதம் சுகாதாரத்துறை அமைச்சராக ஸ்ராவன் பதவியேற்றார். அமைச்சர் பதவி வழங்கப் பட்ட நிலையில் 6 மாதங்களுக்குள் சட்டப்பேரவை அல்லது சட்ட மேலவை உறுப்பினராக தேர்தெடுக்கப்பட வேண்டும். ஆனால் இதுவரை கிடாரி ஸ்ராவன் எம்எல்சி, எம்எல்ஏ தேர்வு செய்யப்படவில்லை. இந்நிலையில் அவரது பதவி காலம் வருகிற 10ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இதையடுத்து ஸ்ராவன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யக்கோரி, கவர்னர் நரசிம்மன், முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு உத்தரவிட்டார்.
இதை தொடர்,ந்து அமைச்சர் ஸ்ராவன் அமராவதி தலைமை செயலகத்தில் உள்ள முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தனிப்பிரிவு செயலாளர் சதீஷ் சந்திரா, சிறப்பு அதிகாரி பிரசாத் ராவ் ஆகியோரிடம் நேற்று தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அந்த கடிதத்தில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கிடாரி ஸ்ராவன் தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.