×

மதுரை ஜிஹெச்சில் 5 பேர் பலியான சம்பவம் மருத்துவக் கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்பப்பட்ட விசாரணை அறிக்கை

மதுரை, மே 9: மதுரை அரசு மருத்துவமனையில் மின்தடையின்போது, வெண்டிலேட்டர் இணைப்புடன் சிகிச்சையிலிருந்த 5 பேர் பலியான சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அதன் அறிக்கை மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்பப்பட்டது.மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் மின்தடை ஏற்பட்ட நேரத்தில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையிலிருந்த மல்லிகா, பழனியம்மாள், ரவீந்திரன் ஆகியோர் இறந்தனர். இவர்கள் மின்தடை காரணமாக வெண்டிலேட்டர் இயங்காததால், மூச்சுத்திணறல் ஏற்பட்டே இறந்தனர் என உறவினர்கள் குற்றம்சாட்டினர். இச்சம்பவம் ெபரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே நேற்று அதிகாலை செல்லத்தாய், ஆறுமுகம் ஆகியோரும் இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்தது.இந்த சம்பவம் தொடர்பாக முழு விசாரணை நடத்தி அறிக்கையை மருத்துவக் கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்பும்படி, சென்னை மருத்துவக்கல்வி இயக்குனர் எட்வின் ஜோ உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து நேற்று காலை மருத்துவமனை டீன் வனிதா, மருத்துவ கண்காணிப்பாளர் ராஜா ஆகியோர், நிலைய மருத்துவ அதிகாரிகள் மற்றும் சம்பவம் நடந்த வார்டிலிருந்த மருத்துவ அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் இறந்தவர்களின் உறவினர்கள் கலந்துகொள்ளவில்லை. இந்த விசாரணை 4 மணி நேரம் நடைபெற்றது. வெண்டிலேட்டர் உள்ளிட்ட மின்சாதனங்களை பராமரித்து வரும் மின் பொறியாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இதனையடுத்து மருத்துவமனை டீன் தலைமையில் விசாரணை அறிக்கை தயார் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், இறந்தவர்கள் என்ன காரணத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். எந்த தனியார் மருத்துவமனையிலிருந்து வந்தனர். அனுமதிக்கப்படும்போது அவர்களின் உடல்நிலை எப்படி இருந்தது. மின்தடை எவ்வளவு நேரம் இருந்தது. மின் தடையின்போது வெண்டிலேட்டரின் செயல்பாடு எப்படி இருந்தது. உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் இடம்பெற்றிருந்தது.இதேபோல், வெண்டிலேட்டரில் உள்ள பேக்அப் மூலம் வெண்டிலேட்டர் எவ்வளவு நேரம் இயங்கியது. மின்தடை ஏற்பட்டு, எவ்வளவு நேரத்திற்கு பிறகு ெஜனரேட்டர் இயக்கப்பட்டது. ெஜனரேட்டர் தாமதமாக இயக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கான விளக்கம் ஆகியவற்றை, மருத்துவமனையில் உள்ள வெண்டிலேட்டர் உள்ளிட்ட மின்சாதனங்களை இயக்கும் மின் பொறியாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு அந்த அறிக்கையும் பெறப்பட்டு மருத்துவக் கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்பப்பட்டது.



Tags : death ,Medical Education Directorate ,Madurai Jhej ,
× RELATED மதுரை விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு