திருத்துறைப்பூண்டி, மே 9: திருத்துறைப்பூண்டியில் மழைவேண்டி பிறவி மருந்தீஸ்வரர்கோயிலில் உள்ள நந்தி பகவானுக்கு வருணஜபபூஜை நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகரில் புகழ்பெற்ற பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் (பெரியகோயில்) கோயில் நிர்வாகம் சார்பில் மழை வேண்டி நேற்றுமுன்தினம் இரவு சிவபெருமானுக்கு ருத்ர ஹோமம் வர்ணஜபம், வருண சூக்தம் பாராயணம் செய்து ருத்ர ஹோம பூஜைகள் நிறைவு பெற்று கடம்புறப்பட்டு நந்தி பகவானுக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது. நந்தி பகவானை தண்ணீரால் நிரப்பி வருணஜப பூஜைகள் நடைபெற்றது. இதில் கோயில் செயல் அலுவலர் முருகையன், ஆய்வாளர் ராமதாஸ், மேலாளர் சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.