×

சாலைவளைவில் வேகமாக திரும்பியபோது மைல்கல் மீது பைக் மோதி விபத்து மாணவர் பலி, 2 பேர் படுகாயம்

மன்னார்குடி, மே 9: திருவாருர் மாவட்டம் கோட்டூர் அருகே சுமைதாங்கி கிராமத்தை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் விஜயகுமார் மகன் தீபன்ராஜ் (15). பள்ளிவர்த்தி மெயின் ரோடை சேர்ந்த ராகவன் மகன் கலையரசன் (15). காசாங்குளம் கிராமத்தை  சேர்ந்த பாலு மகன் பிரவீன் (15). இவர்கள் மூவரும் இணைபிரியா நண்பர்கள். 3 பேரும் கோட்டூர் அருகே  மழவராயநல்லூர் கிராமத்தில் உள்ள அரசினர் உயர் நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் மூன்று மாணவர்களும் நேற்று பள்ளிக்கு மாற்று சான்றிதழ் வாங்க செல்வதாக வீட்டில் கூறிவிட்டு உறவினர் ஒருவரிடம் இரவலாக பைக் வாங்கி கொண்டு 3 பேரும் ஒரே பைக்கில் சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து கோட்டூர் சென்று விட்டு திரும்பிக்கொண்டிருந்தனர்.

கோட்டூர் தோட்டம் கிராமம் மாதாகோயில் வளைவில் வேகமாக திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோரம் மைல் கல் மீது மோதியது. இதில் 3 மாணவர்களும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். அப்போது அவ்வழியே வந்தவர்கள் மூவரையும் மீட்டு மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே தீபன்ராஜ் (15) இறந்தார். கலையரசன் மற்றும் பிரவீன் இருவரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சுமைதாங்கி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags : bike crash ,road ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி