அரியலூர், மே 9: அரியலூர் மாவட்டத்தில் இயற்கை பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்பை தெரிந்து கொள்ள வசதியாக புதிய மொபைல் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் என்று கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு பேரிடர் காலங்களில் பொதுமக்களின் நலன்கருதி வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தணிக்கும் துறையானது மொபைல் ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. TNSMART என்ற பெயர் கொண்ட செயலியை தங்கள் செல்போனில் Google Play store-ல் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இச்செயலியில் அரியலூர் மாவட்டத்தில் மழை, வெள்ளம், அதிக வெப்பம் மற்றும் புயல் ஆகிய பேரிடர் ஆகிய காலங்களில் மக்களுக்கு விழிப்பறிக்கை அனுப்பப்படும். அதன் மூலம் மக்கள் முன்னெச்செரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள இச்செயலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இச்செயலியை அனைத்துதுறை அரசு அலுவலர்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் பேரிடர் தொடர்பான புகார்கள் மற்றும் புயல், மழை மற்றும் வெள்ளத்தில் சேதமடைந்த வீடு, கால்நடை, பயிர் சேதம் ஆகியவற்றின் படம் எடுத்து பதிவேற்றம் செய்யும் வசதியும் இச்செயலியில் உள்ளது. எனவே இச்செயலியினை மக்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.