உடுமலை, மே 9: உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை மூலம் பிஏபி திட்டத்தில், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3.75 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. நான்கு மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது.மூன்றாம் மண்டல பாசனத்துக்கான முதல் சுற்று தண்ணீர் கடந்த ஜனவரி 5ம்தேதி திறக்கப்பட்டது. தொடர்ந்து நான்கு சுற்றுகள் முடிவடைந்த நிலையில், 5-வது சுற்று தண்ணீர் நேற்று திறக்கப்பட்டது. இதன்மூலம் 94 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.60 அடி உயரம் கொண்ட அணையில், 39 அடிக்கு நீர்மட்டம் உள்ளது. நீர் வரத்து 813 கனஅடி, வெளியேற்றம் 387 கனஅடி. இடைவெளியின்றி தொடர்ச்சியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.