பந்தலூர், மே. 8: பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலாக்காய்கள் சீசன் அதிகரித்துள்ளதால், குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். பந்தலூர் சுற்றுவட்டார பகுதி குடியிருப்புகள் மற்றும் விவசாய தோட்டங்களில் அதிகளவில் பலா மரங்கள் உள்ளது. தற்போது சீசன் என்பதால் பலா பழம் காய்த்துள்ளது. இன்னும் சில நாட்களுக்குள் பலா பழுத்துவிடும் நிலையில் உள்ளது. பலாப்பழம் வாசனைக்காக காட்டு யானைகள் ஊருக்குள் நுழைய வாய்ப்புள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் வனவிலங்கு - மனித மோதல் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். குடியிருப்பு பகுதியில் காய்த்துள்ள பலாக்களை அப்புறப்படுத்தி பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி கொள்ளவேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.