ஈரோடு, மே 8: பவானி அருகே தளவாய்பேட்டை-வைரமங்கலம் இடையே பழுதடைந்து கிடக்கும் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து மாவட்ட உழவர் விவாதக்குழு செயலாளர் வெங்கடாசலபதி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பவானி வட்டம் ஜம்பை கிராமம் தளவாய்பேட்டைக்கும் வைரமங்கலத்துக்கும் இடையே கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் பவானி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டு இணைப்பு சாலை அமைக்கப்பட்டது.
ஆற்றுக்கு வடக்கு பகுதியில் உள்ள அந்தியூர், புன்னம், பருவாச்சி, தளவாய்பேட்டைக்கும், தெற்கு பகுதியில் உள்ள வைரமங்கலம்,காஞ்சிகோயில் பெருந்துறை, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு எளிதில் செல்லக்கூடிய வழியாக உள்ளது. தளவாய்பேட்டை வைரமங்கலம் ஆற்றுப்பால இணைப்பு சாலை, இரு சக்கர வாகனங்கள், விவசாய விளைபொருட்கள், இடுபொருட்கள் கொண்டு செல்லும் விவசாயிகள் வியாபாரிகள், பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கு பயனுள்ளதாக இருந்து வந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த சாலை பராமரிக்கப்படாததால் குண்டும் குழியுமாக உள்ளதால் இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.