×

இலவச வேட்டி, சேலைக்கான உற்பத்தி கூலி உயர்த்தப்படுமா?

ஈரோடு, மே 8:இலவச வேட்டி, சேலை, சீருடை உற்பத்திக்கான கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஈரோடு பவானி மெயின்ரோட்டில் உள்ள மாவட்ட கைத்தறி மற்றும் துணிநூல் துறை அலுவலகத்தில் உதவி இயக்குநர் பிச்சைமுத்துவிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:ஈரோடு மாவட்டத்தில் 48 விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் இலவச வேட்டி, சேலைகள் மற்றும் பள்ளி சீருடைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதில், பெரும்பாலும் 10 முதல் 20 தறி உடைய சிறு, குறு விசைத்தறி கூடங்களில் அதிகமாக இலவச வேட்டி, சேலைகள் தரமான முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது. மூன்றரை மீட்டர் நீளத்தில் வேட்டியும், ஐந்தரை மீட்டர் நீளத்தில் சேலையும் உற்பத்தி செய்யப்படும். கடந்த 2011ம் ஆண்டு ஒரு வேட்டி உற்பத்தி செய்ய 16 ரூபாயும், சேலை உற்பத்தி செய்ய 28 ரூபாய் 16 காசும் கூலியாக கொடுக்கப்பட்டது.

அதற்கு பிறகு கூலி உயர்த்தப்பட்டு 2012ம் ஆண்டு ஒரு வேட்டிக்கு 18 ரூபாய் 48 காசும், ஒரு சேலைக்கு 31 ரூபாய் 60 காசும், 2013ம் ஆண்டு ஒரு வேட்டிக்கு 21 ரூபாய் 60 காசும், சேலைக்கு 39 ரூபாய் 27 காசும் வழங்கப்பட்டது. நூலின் தடிமன் அதிகரிக்கப்பட்டதால் கடந்த 2013ம் ஆண்டு கூலி உயர்த்தப்பட்டது. அதாவது உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் நூலின் தடிமன் 60 பிக்கில் இருந்து 64 பிக்காக அதிகரிக்கப்பட்டதால் கூலி உயர்த்தப்பட்டது. 2014ம் ஆண்டில் இருந்து இதுவரை இலவச வேட்டி, சேலைகள் உற்பத்தி செய்யும் விசைத்தறி நெசவாளர்களுக்கு கூலி உயர்த்தப்படவில்லை. ஆனால், உற்பத்தி செலவு அதிகரித்து இருப்பதால் லாபம் கிடைப்பதில்லை. தற்போது அரசால் தரப்படும் கூலி ஒரு பிக்கிற்கு 9 பைசா கொடுக்கப்படுகிறது. இந்த கூலியை 15 பைசாக உயர்த்தி வழங்கவேண்டும். ஒரு வேட்டி நெசவு செய்ய நெசவாளர்களுக்கு கூலியாக 9 ரூபாயும், மின்கட்டணம், உதிரிபாகங்கள், வாடகை மற்றும் ஆட்களின் சம்பளம், போக்குவரத்து செலவு இணைந்து ரூ.14.50ம் என ரூ.23.50 செலவாகிறது.

இதேபோல், சேலை உற்பத்திக்கும் கூடுதல் செலவாகி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் உற்பத்திக்கான செலவு பல மடங்காக உயர்ந்த நிலையில் கூலி மட்டும் உயர்த்தப்படவில்லை. ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் இலவச வேட்டி, சேலை மற்றும் பள்ளி சீருடைக்காக தற்போது 447 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக உற்பத்திக்கு நிதியை ஒதுக்கிவிட்டு கூலியை மட்டும் உயர்த்தவில்லை. இந்த தொழிலை நம்பியுள்ள சிறு, குறு விசைத்தறி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். குறிப்பாக, வேட்டிக்கு 36 ரூபாயும், சேலைக்கு 52 ரூபாயும், பள்ளி சீருடைகளுக்கு ரூ.12.60ம் உயர்த்தி வழங்க வேண்டும். இவ்வாறு மனுவி கூறி உள்ளனர்.

Tags :
× RELATED கொடுமுடி வட்டாரத்தில் வேளாண்மை...