×

திருவாரூரில் இருந்து ராமநாதபுரத்திற்கு ரயில் மூலம் பொது வினியோக திட்டத்திற்கு 190 மெ.டன் அரிசி அனுப்பி வைப்பு

திருவாரூர், மே 8: திருவாரூரிலிருந்து நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தின் பொது வினியோக திட்டத்திற்காக  ஆயிரத்து 190  மெ.டன் அரிசியினை ரயில் மூலம் அனுப்பும் பணி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில்  3 லட்சத்து 65 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடியினை விவசாயிகள் மேற்கொண்ட நிலையில்  பின்னர் அறுவடை பணிகள் துவங்கியதையடுத்து மாவட்டம் முழுவதும் மொத்தம் 436 அரசு கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு காரி பருவத்தில் இதுவரையில்  5 லட்சத்து 43 ஆயிரம்  மெ.டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.  

இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல் அனைத்தும் 40 கிலோ எடை கொண்ட மூட்டைகளாக கட்டப்பட்டு மாவட்டம் முழுவதும்  உள்ள நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான கிடங்குகள் மற்றும் திறந்தவெளி கிடங்குகளில் அடுக்கி வைக்கப்பட்டு வருகின்றன. மேலும் தினந்தோறும் சுமார் ஆயிரம் டன் அளவில் மாவட்டம் முழுவதும் உள்ள 26 நவீன அரிசி ஆலைகளுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு அரிசியாக அரைக்கப்படும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வெளி மாவட்டங்களின் பொது விநியோக திட்டத்திற்காக அரிசியை ரயில் மூலம் அனுப்பும் பணியும் நடைபெற்று வருகிறது.  அதன்படி நேற்று திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்தின் பொது விநியோக திட்டத்திற்காக  21 வேகன்களில் ஆயிரத்து 190 மெ.டன் அரிசி மூட்டைகளை அனுப்பும் பணியில் தொழிலாளர்கள்  ஈடுபட்டனர்.

Tags : Tiruvarur ,Ramanathapuram ,
× RELATED கூட்டுறவு மேலாண்மை முழுநேர...