காரைக்கால்,
மே 8: கும்பகோணம் அடுத்த ஆடுதுறையில் நடைபெற்ற நாடகப் போட்டியில்,
காரைக்கால் நடாகக்குழு முதல் மற்றும் 4 சிறப்பு பரிசை பெற்று சாதனை
படைத்துள்ளது.
கும்பகோணம் அடுத்த ஆடுதுறையில் அன்பாலயா நாடக சபாவின்
28ம் ஆண்டு விழா மற்றும் 5 ஆவது நாடகப்போட்டி விழா மே 1ம் தேதி தொடங்கியது.
தொடர்ந்தாற்போல் 5 நாட்கள் நடைபெற்ற இந்த நாடகப் போட்டியில், திருச்சி,
ஈரோடு, தஞ்சை, கொடிமுடி, கோயம்புத்தூர், காரைக்கால் உள்ளிட்ட
மாவட்டங்களிலிருந்து 10 நாடகக்குழுக்கள் கலந்து கொண்டன. போட்டியின்
முடிவில், காரைக்கால் நந்தா கிரியேஷன் நாடக குழுவின் சார்பில் நந்தகுமார்
எழுதி இயக்கிய ‘அதே மயக்கம்’ என்ற சமூக நாடகம் சிறந்த நாடகத்திற்கான முதல்
பரிசை வென்றது. மேலும் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான முதல் பரிசினை
நாடகத்தில் நடித்த செல்வமணிக்கும், சிறந்த நடிகருக்கான சிறப்பு விருதினை
குணசேகருக்கும். சிறந்த கதை வசனம் இயக்கத்திற்கான சிறப்பு விருதுகள்
நந்தகுமாருக்கும் வழங்கப்பட்டது. மேலும், நாடகத்தில் சிறப்பாக நடித்த அம்பை
ராஜேந்திரன், முகம்மது பைசல், மதன், வரீஸ், மோகன் ஆகியோர்
கவுரவிக்கப்பட்டனர்.