×

திருப்புலிவனத்தில் மதிமுக நிர்வாகிக்கு வெட்டு

காஞ்சிபுரம், மே 8: மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட மதிமுக செயலாளர்  வளையாபதி மற்றும் அவைத்தலைவர் கருணாகரன், பொருளாளர் சங்கரன்  ஆகியோர் நேற்று காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி பொன்னியிடம் அளித்த புகார் மனு: காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட மதிமுக மாணவரணி துணை அமைப்பாளர் திருப்புலிவனத்தை சேர்ந்த சுரேஷ்குமார் உத்திரமேரூரில் தையல் கடை நடத்தி வருகிறார். கடந்த மே 4ம் தேதி திருப்புலிவனத்தில் உள்ள வீட்டில் சுரேஷ்குமார் குடும்பத்தினருடன் இருந்தபோது திருப்புலிவனத்தை சேர்ந்த பல்வேறு  வழக்குகளில் தொடர்புடைய ரவிச்சந்திரன் மகன் பாலாஜி என்பவர் அரிவாளால் வெட்டியுள்ளார். இதை தடுக்க முயன்றபோது சுரேஷின் மனைவியையும் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த சுரேஷ்குமாரை அப்பகுதி மக்கள் மீட்டு  சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஐ.சி.யு பிரிவில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பாலாஜி மீது உத்திரமேரூர் காவல் நிலையத்தில் இருசக்கர வான திருட்டு, கஞ்சா விற்பனை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் பாலஜியுடன் இந்த வழக்கில் அஜித்குமார், சரவணன் ஆகியோர் சதி ஆலோசனையில் ஈடுபட்டதாக தெரிய வருகிறது. மதிமுக மாணவரணி நிர்வாகியான சுரேஷுக்கு எந்தவிதமான முன்பகையும் கிடையாது. எனவே இந்த சம்பவத்தில் வேறு யாராவது சம்மந்தப்பட்டுள்ளார்களா? என்று புலன் விசாரணை செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளனர். மனுவை பெற்றுக்கொண்டதும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட எஸ்.பி உறுதி அளித்தார்.

Tags : MDM Administrator ,
× RELATED கோயில்களில் பணம், நகை கொள்ளை