×

எழும்பூர் ரயில் நிலையத்தில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் : தப்பிய ஆசாமிக்கு வலை

சென்னை, மே 8: எழும்பூர் ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 14 கிலோ கஞ்சாவை ரயில்வே காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். ரயிலில் கடத்தி வந்து போட்டுவிட்டு தப்பிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் வீரேந்திரசிங் உத்தரவின் பேரில் எஸ்.ஐ சரோஜ் குமார் தலைமையிலான போலீசார் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது  7வது நடைமேடையில் மூட்டை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. இதனை பார்த்த போலீசார் அந்த மூட்டையை கண்காணித்து வந்தனர்.  வெகு நேரமாகியும் மூட்டையை எடுக்க யாரும் வராததால், சந்தேகமடைந்த பாதுகாப்பு படையினர் மூட்டையை பிரித்து பார்த்தனர். அப்போது அதில் 14 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அந்த கஞ்சா பொட்டலங்களை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  இந்த கஞ்சாவின் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். ரயிலில் கடத்தி வந்த கஞ்சாவை போலீசாருக்கு பயந்து போட்டுவிட்டு தப்பிய ஆசாமிகள் யார் என விசாரணை நடக்கிறது.

Tags : kanja ,railway station ,Egmore ,
× RELATED தஞ்சாவூர் ரயில் நிலையத்தில்...