×

இடைப்பாடி அருகே கோனேரிப்பட்டி நீர்மின் கதவணை பராமரிப்பால் மின் உற்பத்தி நிறுத்தம்

இடைப்பாடி, மே 7: இடைப்பாடி அருகே, கோனேரிப்பட்டி நீர்மின் கதவணை பராமரிப்புக்காக தண்ணீர் திறக்கப்பட்டதால் பரிசல் போக்குவரத்து, மின்சார உற்பத்தி ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக திறந்து விடப்படும் காவிரி நீர் செக்கானூர்-பூலாம்பட்டி, கோனேரிப்பட்டி, ஊராட்சி கோட்டை ஆகிய நீர்மின் கதவணை தேக்கம் வழியாக பவானி, திருச்சி, தஞ்சாவூருக்கு செல்கிறது. இங்கு தண்ணீர் தேக்கப்படுவதால், கடல்போல் காட்சியளிக்கும் இப்பகுதியில் தினமும் 30 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.  

ஆண்டுதோறும் கதவணை மதகு பராமரிப்பு செய்யப்படும் நேரத்தில், தேக்கி வைக்கப்படும் தண்ணீர் வெளியேற்றப்படும். இடைப்பாடி அருகேயுள்ள கோனேரிப்பட்டி நீர்மின் கதவணை பராமரிப்பு பணிக்காக, தண்ணீர் தேக்கம் கடந்த 4ம் தேதி வெளியேற்றப்பட்டது. இதனால், இப்பகுதி முழுவதும் தற்போது, பாறைகளாக காட்சியளிக்கிறது. பராமரிப்பு பணி வரும் 19ம் தேதி வரை 15 நாட்களுக்கு நடக்கும். தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

 அதே போல், நாவிதன்குட்டை, காட்டூர், கோனேரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் பரிசல் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. மதகு பராமரிப்பு பணியால், நெடுங்குளம்-காட்டூரிலிருந்து ராசிபுரம் கூட்டு குடிநீர் திட்டம், 327.சங்ககிரி கூட்டு குடிநீர் திட்டம், தேவூர், அரசிராமணி ஆகிய பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். எனவே, பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : interstate ,doorway ,
× RELATED இடையகோட்டையில் கொரோனோ தடுப்பூசி முகாம்