நாமக்கல், மே 7: வீட்டுமனைகளை அபகரிக்க மிரட்டும் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு மண்ணெண்ணெய் கேனுடன் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று, வையப்பமலை மலைக்காவல் அம்மன் கோயில் தெருவை சேர்ந்த கண்பார்வையற்ற மாற்றுதிறனாளி பொன்னுசாமி(55), தனது மனைவி மாரியாயியுடன் மண்ணெண்ணெய் கேனுடன் வந்தார். கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி, அவர்களிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர்.
பின்னர், இருவரையும் நல்லிபாளையம் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். பொன்னுசாமி, கலெக்டர் ஆசியாமரியத்திடம் அளிக்க, ஒரு மனுவை கொண்டு வந்தார். அதில், எனது பெயரில் 2 வீட்டுமனை உள்ளது. எனக்கு கண்பார்வை இல்லாத காரணத்தால், உறவினர்கள் சிலர் அந்த வீட்டுமனைகளை கேட்டு 6 ஆண்டாக மிரட்டி வருகிறார்கள். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.