தேன்கனிக்கோட்டை, மே 7: அஞ்செட்டி, தளியில் மலை கிராமங்களில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வழிகாட்டுதலின் பேரில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் 6 முதல் 18 வயது வரை பள்ளி செல்லா, பள்ளி இடைநின்ற குழந்தைகள் மற்றும் புலம்பெயர்ந்த குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி அஞ்செட்டி மலை பகுதி கிராமங்களில் நடைபெற்றது.
பிடிஎஸ் தொண்டு நிறுவனம் சார்பில் பிலிகுண்டுலு, மஞ்சிமலை உள்ளிட்ட கிராமங்களில் வீடு, வீடாக சென்று பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்கள் குறித்து விசாரித்து பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்தனர். முகாமில் பிடிஎஸ் தொண்டு நிறுவனம் நிர்வாகி தணிகாசலம், சுதாராணி மற்றும் கக்கதாசம் உண்டு உறைவிடப்பபள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
ஓசூர்: ஓசூரில் இயங்கிவரும் வித் யூ கல்வி அறக்கட்டளை சார்பில், தளி ஒன்றியம் கும்மளாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. முகாமில், புதிதாக ஒன்றாம் வகுப்பில் 32 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இதில், தனியார் பள்ளிகளுக்கு செல்லவிருந்த மாணவர்களும் அடங்குவர். அரசுப்பள்ளிகளில் உள்ள சிறப்பம்சங்கள் மற்றும் அரசுப்பள்ளிகளில் வழங்கப்படும் விலையில்லா கல்வி பொருட்கள் குறித்து எடுத்து கூறப்பட்டு, புதிய மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது.
புதிய மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகங்கள், எழுதுபொருட்கள், இனிப்பு ஆகியவை வித் யூ கல்வி அறக்கட்டளை மூலமாக வழங்கப்பட்டு, மேள தாளத்துடன் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு பள்ளியில் சேர்க்கப்பட்டனர். நிகழ்ச்சியில் வித் யூ கல்வி அறக்கட்டளை உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், அந்தந்த பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.