×

குடும்பம் நடத்த மனைவி வர மறுத்ததால் ஆத்திரம் மாமியார் குத்திக் கொலை: மருமகனுக்கு வலை

சென்னை: குடும்ப பிரச்னையில் மாமியாரை குத்தி கொலை செய்த மருமகனை  போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (39). இவர், கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சுஷ்மிதா (24). இவர்களுக்கு, 4 வயதில் மகன் உள்ளார். இந்த நிலையில், பல்வேறு குடும்ப பிரச்னை சம்பந்தமாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக சுஷ்மிதா, தனது தாய் வீட்டுக்கு அடிக்கடி சென்று விடுவாராம். பின்னர், சதீஷ்குமார் மாமியார் வீட்டிற்கு சென்று சமாதானப்படுத்தி மீண்டும் அழைத்து வருவது தொடர்கதையாக இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த வாரம் சண்டை போட்டு விட்டு மண்ணிவாக்கம், இந்திரா நகரில் உள்ள தனது தாய் ஜெயசித்ரா வீட்டுக்கு சுஷ்மிதா சென்று இருக்கிறார். பின்னர், சதீஷ்குமார், மனைவிக்கு போன் செய்து வீட்டிற்கு வருமாறு கூப்பிட்டுள்ளார். ஆனால், சுஷ்மிதா வர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, மண்ணிவாக்கத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் சதீஷ்குமார் சென்று மனைவி சுஷ்மிதா, மாமியார் ஜெயசித்ரா ஆகியோருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, மனைவி, மாமியார் இருவரும் சேர்ந்து சதீஷ்குமாரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால், கோபம் அடைந்த சதீஷ்குமார், தனது இடுப்பில் வைத்திருந்த கத்தியை எடுத்து மாமியார் ஜெயசித்ராவின் கழுத்து, வயிறு என பல்வேறு பகுதிகளில் சரமாரி குத்தியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் விழுந்த ஜெயசித்ரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதை பார்த்ததும் சதீஷ்குமார் அங்கிருந்து தலைமறைவாகி விட்டார்.

இதுகுறித்து தகவலறிந்ததும் ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஜெயசித்ராவின் சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : mother-in-law ,nephew ,
× RELATED பாஜக எம்எல்ஏவின் மருமகன்.. ஈரோடு...