மன்னார்குடி, மே 7: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகில் உள்ள பிரசித்திபெற்ற வைணவ தலமான வடுவூர் கோதண்டராமர்கோயிலில் ராமநவமி விழாவையொட்டி பிரமோற்சவம் கடந்த 21ம் தேதியுடன் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து விடையாற்றி விழா நடைபெற்று வருகிறது.
விடையாற்றி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சமுக அனுமன் வாகனத்தில் கோதண்டராமர் வீதியுலா நடைபெற்றது. கருடன், நரசிம்மர், அனுமன், வராகர், ஹயகிரீவர் ஆகிய ஐந்து முகங்கள் கொண்ட பஞ்ச முக அனுமன் வாகனத்தில் கோதண்டராமர் வில்லேந்திய திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பஞ்சமுக அனுமன் மற்றும் கோதண்டராமருக்கு விசேஷ பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடை பெற்றது. பின்னர் சுவாமி வீதியுலா நடைபெற்றது. வழியெங்கும் பக்தர்கள் ஆரத்தி எடுத்து பஞ்சமுக அனுமனையும், கோதண்ட ராமரையும் வழிபட்டனர்.