×

வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் துணை பிடிஓ வேலை வாங்கி தருவதாக ₹19 லட்சம் மோசடி

வேலூர், மே 7:துணை பிடிஓ வேலை வாங்கி தருவதாக கூறி ₹19 லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வேலூர் எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தனர். வேலூர் மாவட்டம், ஆம்பூர் அத்திமாகொலபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சேகர்(62). இவர் நேற்று காலை வேலூர் எஸ்பி அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது மகன் புருஷோத்தமன்(28). ஐடிஐ முடித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு ஆம்பூரை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் எனக்கு அறிமுகம் ஆனார். தான் வட்ட வழங்கல் அதிகாரியாக இருப்பதாகவும், ₹19 லட்சம் கொடுத்தால் புருஷோத்தமனுக்கு துணை பிடிஓ வேலை வாங்கி தருவதாகவும் என்னிடம் தெரிவித்தார். இதை நம்பி 4 தவணையாக ₹19 லட்சத்தை ராஜ்குமாரிடம் கொடுத்தேன்.

ஆனால் 3 ஆண்டுகள் ஆகியும் வேலை வாங்கி தரவில்லை. இதுகுறித்து கேட்டபோது ராஜ்குமார், அவரது தந்தை சுப்பிரமணி, உறவினர்கள் சிவா, தரணிகுமார் ஆகியோர் பணத்தை திருப்பி தர முடியாது. தொந்தரவு செய்தால் உங்களை கொன்று புதைத்துவிடுவேன் என மிரட்டுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட போலீசார், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.


Tags : Vellore SBI ,
× RELATED சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணம்...