×

பசுவந்தனை அருகே விவசாயி வீட்டில் நகை ரூ.1 லட்சம் கொள்ளை

ஓட்டபிடாரம், மே 3: பசுவந்தனை அருகே விவசாயி வீட்டை உடைத்து ரூ.1 லட்சம் பணம் மற்றும் 7 பவுன் நகை கொள்ளை போனது. பட்டப்பகலில் இந்த துணிகர சம்பவம் நடந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே உள்ள சில்லாங்குளம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர்(59) விவசாயி. இவரது மனைவி ராஜேஸ்வரி(50). இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். திருமணமாகவில்லை. சந்திரசேகருக்கு புளியம்பட்டி பகுதியில் பரிவல்லிக்கோட்டையில் தோட்டம் உள்ளது. அங்கு தங்குவதற்கு சிறிய வீடும் கட்டியிருக்கிறார். கடந்த 30ம்தேதி சந்திரசேகர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தோட்டத்திற்கு சென்றார். அங்கு தங்கிவிட்டு மாலையில் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.

பீரோவில் இருந்த ரூ.1 லட்சம் மற்றும் 7 பவுன் நகையும் திருட்டு போயிருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.2.50 லட்சமாகும். இதுகுறித்து பசுவந்தனை போலீசில் புகார் செய்யப்பட்டது. எஸ்ஐ பாலன் விசாரித்து வருகிறார்.
கடந்த 3 மாதத்திற்கு முன் இதுபோல் மெயின் ரோட்டில் உள்ள வீடுகளை குறிவைத்து கொள்ளை கும்பல் கைவரிசை காட்டியது. அதே போன்றுதான் இவரது வீட்டிலும் கொள்ளை நடந்துள்ளது. பட்டப்பகலில் விவசாயி வீட்டில் கொள்ளை நடந்திருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Tags : house ,Pasavantan ,
× RELATED ஏட்டு வீட்டில் திருடிய 2 பேரை காவலில் எடுத்து விசாரணை