சாத்தான்குளம், மே 3: சாத்தான்குளம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். சாத்தான்குளம் பேருராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்குள்ள மக்களுக்கு வைகுண்டம் பொன்னங்குறிச்சியில் இருந்து சாத்தான்குளம் &உடன்குடி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு 3மணி நேரம் குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது திடீரென குடிநீர் விநியோகிக்கும் நேரம் மாற்றப்பட்டு ஒன்றரை நேரமாக குறைக்கப்பட்டு அதேபோல் ஒருநாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. தண்ணீர் போதிய முறையாக வராததால் தெரு குடிநீர் குழாயில் 15 நிமிடம் மட்டுமே குடிநீர் கிடைக்கிறது. இதனால் போதிய குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் கூறியதாவது: சாத்தான்குளம் பேருராட்சி பகுதியில் 3மணி நேரம் வழங்கப்பட்ட தண்ணீர் தற்போது ஒன்றரை மணி நேரம் வழங்கப்படுகிறது. தற்போது போதிய குடிநீர் கிடைக்காத நிலையில் சில நேரம் புகாரின் பேரில் அதிகாரிகள் மின்மோட்டார்களை பறிமுதல் செய்கின்றனர். தெருக்குழாயில் தண்ணீர் கிடைக்காத காரணம் ஓரே லைனில் தெருக்குழாய்க்கும், வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகளும் உள்ளதால் தண்ணீர் வரத்து பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.எனவே அதிகாரிகள் ஆய்வு நடத்தி தெருக்குழாய் மற்றும் வீடுகளில் போதிய குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.