×

தர்மபுரியில் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டான நிலையில் மாணவர் சடலம் மீட்பு

தர்மபுரி, மே 3:  தர்மபுரி ரயில் நிலையம் அருகே எம்ஜிஆர் நகர் உள்ளது. இங்குள்ள ரயில்வே தண்டவாளத்தில்,  நேற்று காலை தலை துண்டான நிலையில் கல்லூரி மாணவர் சடலம் கிடந்தது. இதுகுறித்து அவ்வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில், ரயில்வே எஸ்ஐ கோதண்டபாணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு சீருடை அணிந்த வாலிபர் ஒருவர், தலை துண்டான நிலையில் இறந்து கிடந்தார். இதையடுத்து சடலத்தை மீட்ட போலீசார், தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
விசாரணையில், சடலமாக கிடந்தவர் தர்மபுரி எம்ஜிஆர் நகரை சேர்ந்த மாதையன் மகன் லோகேஸ்வரன்(21) என்பதும், அவர் தர்மபுரியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது. கடந்த சில நாட்களாக, லோகேஸ்வரன் கல்லூரிக்கு சரிவர செல்லாமல் இருந்துள்ளார். இதுதொடர்பாக, கடந்த 30ம் தேதி அவரது தந்தை லோகேஸ்வரனை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த லோகேஸ்வரன், வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், நேற்று தண்டவாளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து தர்மபுரி ரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Student body ,railway track ,Dharmapuri ,
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...