புதுக்கோட்டை, மே 3: புதுக்கோட்டை அருகே ரூ.5 கோடி நகைகளுடன் வங்கி அலுவலக உதவியாளர் தனது காருடன் மாயமானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை அருகே உள்ள திருக்கட்டளையை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் புதுக்கோட்டை தெற்கு ராஜவீதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் அலுவலக உதவியாளராக கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். மனைவி ராணி மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் புதுக்கோட்டை கீழ 5ம் வீதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். மேலும் சொந்தமாக கார் வைத்து உள்ளார். கடந்த 22ம் தேதி மாரிமுத்து வீட்டில் இருந்து தனது காரில் சென்றவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதுகுறித்து மாரித்துவின் மனைவி ராணி புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீசில் புகார் கொடுத்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரிமுத்துவிற்கு சொந்தமான கார் வல்லத்திராக்கோட்டை பகுதியில் உள்ள தைலமர காட்டு பகுதியில் எரிந்த நிலையில் கிடந்தது. அந்த காரில் கவரிங் வளையல்கள் மற்றும் ஒரு ஹார்ட் டிஸ்க் கிடந்தது. இந்த சம்பவம் குறித்து வல்லத்திராக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாரிமுத்து திடீரென மாயமானதால், அவர் வங்கியில் இருந்து நகைகளை எடுத்து சென்று இருக்கலாம் என வங்கி அதிகாரிகள் சந்தேகப்பட்டு, புதுக்கோட்டை தெற்கு ராஜவீதியில் உள்ள வங்கியில் கோவை, திருச்சி உள்ளிட்ட வங்கிகளில் உள்ள உயர் அதிகாரிகள் வங்கியில் உள்ள நகைகள் சரியாக உள்ளதா என கடந்த 2 நாட்களாக ஆய்வு செய்து வருகின்றனர்.
இதற்கிடையில் காணாமல் போன மாரிமுத்துவை கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதற்கிடையில், நகைகளை மாரிமுத்து எடுத்து சென்றதாக பரவிய செய்தியால் வங்கிகளில் நகைகளை அடகு வைத்தவர்கள் நூற்றுக்கணக்கானோர் நேற்று காலை முதல் நகை அடகு வைத்த அட்டையுடன் வங்கியில் குவிய தொடங்கி உள்ளனர். இதனால் நேற்று காலை முதல் வங்கி பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. மேலும் வங்கி அதிகாரிகளிடம் நகைகளை அடகு வைத்த வாடிக்கையாளர்கள் கேட்டபோது ஒரு சிலருக்கு நகைகள் உள்ளது என்று கூறுவதாகவும், மேலும் பலருக்கு உங்கள் நகைகள் காணவில்லை இருப்பினும் நகைகளுக்கு நாங்கள் பொறுப்பு என்று சமாதானப்படுத்தி அனுப்புவதாக வங்கி வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் தற்போது தலைமறைவாக உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி அலுவலக உதவியாளர் மாரிமுத்து சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான நகைகளை எடுத்து சென்றிருக்கலாம் என்று வங்கி உயர் அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர். அந்த சந்தேகமும் தற்போது வாடிக்கையாளர்களிடம் நகைகள் இல்லை என்று கூறி வருவதால் மாரிமுத்து நகைகளுடன் சென்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் வங்கி நிர்வாகம் இதுவரை போலீசாரிடம் அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு புகாரும் கொடுக்கவில்லை. வங்கி நிர்வாகத்தின் சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) இதுகுறித்து புகார் அளிக்க வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.