×

கோடை உழவு செய்தால் மண்ணின் வளம் மேம்படும் வேளாண் இணை இயக்குநர் தகவல்

தேனி, மே 3: தேனி மாவட்டத்தில் கோடைகால உழவை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும். இதனால் மண்ணின் வளம் மேம்படும் என தேனி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்தார். தேனி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஜவஹரிபாய் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் கடந்த மாதம் 25ம் தேதி 31.9 மி.மீ. மழை பெய்துள்ளது. இம்மழையை பயன்படுத்தி விவசாயிகள் தங்களது நிலத்தை கோடை உழவு செய்து பயன்பெற வேண்டும். கோடை கால உழவு மேற்கொள்வதால் மண்ணின் வளமானது மேம்பட்டு பயிர் நன்கு வளரக்கூடிய சூழ்நிலை உருவாகும். மண்ணில் காற்றுப்பரிமாற்றம் அதிகரித்து விதையானது மண்ணில் உள்ள ஈரப்பதத்தை எளிதில் எடுத்துக்கொள்ளும். மேலும் மண்ணின் இறுக்கம் குறைந்து பயிரின் வேர்வளர்ச்சி அதிகரிக்கும். பல ஆண்டுகளாக நிலத்தின் அடியில் இருக்கும் அருகம்புல் மற்றும் கோரைப்புல் போன்ற களைகளின் கிழங்குள் கோடை கால உழவின்போது நிலத்திற்கு மேல் கொண்டுவரப்பட்டு அழிக்கப்படும்.

கோடை உழவின்போது விவசாயிகள் வேப்பம் புண்ணாக்கு இட்டு உழவு செய்வதன் மூலம் மக்காச்சோள பயிரினை தாக்கி அழிக்கும் படைப்புழுவின் கூட்டுப்புழுக்கள் மண்ணின் அடியிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டு சூரிய வெப்பத்தாலும், பறவைகளாலும் அழிக்கப்படும். ஏற்கனவே, விவசாயிகளால் நிலத்திடப்பட்ட இயற்கை எரு, செயற்கை உரங்கள் மண்ணுடன் கலந்து அவற்றின் சத்துக்கள் பயிர்களுக்கு முழுமையாக கிடைக்கும். கோடைகால உழவு செய்யும்போது நிலச்சரிவிற்கு குறுக்காக உழுவதன் மூலம் பெறப்படும் மழைநீரை நிலத்திலேயே சேமிக்கலாம். இதன்மூலம் மண்ணின் ஈரப்பதம் பாதுகாக்கப்பட்டு நிலத்தடிநீர் மேம்பாடு அடைய வழிவகை ஏற்படுகிறது. எனவே கோடை கால உழவு குறித்து அறிந்துகொள்ள விவசாயிகள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை தொடர்பு கொண்டு விபரம் அறியலாம் என வேளாண்மை இணை இயக்குநர் ஜவஹரிபாய் தெரிவித்தார்.

Tags : Agronomist Director of Agriculture ,
× RELATED பன்றிகளை அப்புறப்படுத்த கோரிக்கை