×

கமுதி அருகே இளம் பெண் மர்ம சாவு உறவினர்கள் போராட்டம்

கமுதி, மே 1:  கமுதி அருகே அபிராமம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட டி.வல்லக்குளம் மாயாண்டி  மகள் ராதிகா(20). இவருக்கும், பார்த்திபனூர் அருகே பிச்சாத்தனூரைச் சேர்ந்த அருண்குமார்(23) என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணமான சில மாதங்களில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு குடும்ப பிரச்னை இருந்து வந்துள்ளது. இதனால் ராதிகா தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். கடந்த ஒரு ஆண்டாக பெற்றோரிடம் தான் இருந்துள்ளார். இதற்கிடையே கடந்த 28ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற ராதிகா வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் டி.வல்லக்குளம் கண்மாய் கால்வாய் அருகே ராதிகாவின் உடல் எரிந்த நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அபிராமம் போலீசார் உடலை கைப்பற்றி கமுதி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ராதிகாவின் தாய் லெட்சுமி கொடுத்த புகாரின் பேரில், அபிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் நேற்று ராதிகாவின் சாவில் மர்மம் உள்ளதாக கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர். கமுதி டி.எஸ்.பி.சண்முக சுந்தரம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.

Tags : kamudi ,death ,relatives ,
× RELATED கமுதி கோயில் திருவிழாவில் உடலில் சேறு பூசி பக்தர்கள் நேர்த்திக்கடன்