×

மாவட்டம் அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் சூரசம்ஹாரம்

அருப்புக்கோட்டை, மே 1: அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் சூரசம்ஹாரமும், பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் நேற்று நடைபெற்றது. அருப்புக்கோட்டை புளியம்பட்டி, திருநகரம் சாலியர் மகாஜன பரிபாலன சபைக்கு பாத்தியப்பட்ட ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில், பொங்கல் திருவிழா கடந்த ஏப்.23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினசரி மண்டகப்படிதாரர்களால், ஆயிரங்கண் மாரியம்மன் அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா வந்து எழுந்தருளினார். 8ம் நாள் திருவிழாவாக நேற்று (ஏப்.30) அம்மனுக்கு ஏராளமான பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். மேலும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும் நடந்தது.

9ம் நாள் திருவிழாவாக இன்று பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்தும், பூக்குழி இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்துவர். 10ம் நாள் திருவிழாவாக நாளை (மே 2) தேரோட்டமும், 11ம் நாள் திருவிழாவாக வருகிற 3ம் தேதி பூப்பல்லாக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு கோவில் கலையரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை புளியம்பட்டி திருநகரம் சாலியர் உறவின்முறை தலைவர் சண்முக கணபதி, செயலாளர் சோமராஜன், பொருளாளர் ராஜேந்திரன், துணைத்தலைவர் முனு கருப்பசாமி, விழாக்குழு தர்மர் ஆறுமுகம் உட்பட புளியம்பட்டி, திருநகரம், சாலியர் மகாஜன பரிபாலன சபை நிர்வாக குழுவினர் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags : Thurangangan Mariamman temple ,district ,Aruppukottai ,
× RELATED செங்கல்பட்டு வட்டாட்சியர்...