×

காசவளநாடு தெக்கூர் கல்லணை ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட நடைபாலம் இடிந்து விழும் அபாயம் அசம்பாவிதம் ஏற்படும் முன் புதிதாக கட்ட மக்கள் வலியுறுத்தல்

தஞ்சை, மே 1: காசவளநாடு தெக்கூர் கிராமத்தின் நடுவே கல்லணை கால்வாய் ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட நடைபாலம் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன் புதிய பாலம் கட்டித்தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சை அருகே காசவளநாடு தெக்கூர் கிராமத்தின் நடுவே கல்லணை கால்வாய் ஆறு செல்கிறது. இந்த ஆறு நடுவே செல்வதால் ஆற்றின் மேற்கு பகுதியிலும், கிழக்கு பகுதியிலும் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியினர் ஆற்றின் குறுக்கே நடந்து செல்வதற்காக ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஒரு மீட்டர் அகலத்தில் நடைப்பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக பொதுமக்கள் நடந்து செல்லவும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லவும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் நடூர், கொல்லங்கரை, வடக்குப்பட்டு, வேங்கராயன்குடிகாடு, கோவிலூர், அருமுளை, நாட்டரசன்கோட்டை, ஈச்சங்கோட்டை, கோவிலூர், கருக்காக்கோட்டை, மேலஉளூர், காட்டுக்குறிச்சி உள்ளிட்ட 30 கிராம மக்கள் இருசக்கர வாகனங்களில் செல்லவும், நடந்து செல்லவும் இந்த பாலத்தை தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் தெக்கூர் கிராமத்தில் மேற்கு பகுதியில் யாரேனும் இறந்துவிட்டால் அவர்களின் உடலை தகனம் செய்ய கிழக்கு பகுதியில் உள்ள சுடுகாட்டுக்கு செல்ல இந்த நடைபாலத்தின் வழியாக செல்ல முடியாததால் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி கொண்டு சுடுகாட்டுக்கு இன்றளவும் சென்று வருகின்றனர். ஆற்றில் தண்ணீர் செல்லும்போது இந்த பாலத்தின் வழியாக சென்ற பலர் நிலைதடுமாறி ஆற்றுக்குள் விழுந்து இறந்த சம்பவங்களும் நடந்துள்ளது.
இந்நிலையில் பாலத்தில் ஆங்காங்கே தற்போது விரிசல் ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. பாலத்தின் இருபுறமும் இரும்பாலான கைப்பிடிகள் அப்போது அமைக்கப்பட்டது. அந்த தடுப்பு இரும்புகள் ஆங்காங்கே உடைந்து எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் உள்ளது. தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ள இப்பாலத்தை அகற்றி விட்டு 4 சக்கர வாகனங்கள் செல்லும் வகையில் புதிய பாலம் அமைத்து தர வேண்டுமென அரசுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆற்றில் தண்ணீர் இல்லாத நிலையில் உடனடியாக திட்ட மதிப்பீடு தயார் செய்து பணிகளை நிறைவேற்றினால் இப்பகுதி மக்கள் பெரிதும் பயன்பெறுவர். இல்லையென்றால் வரக்கூடிய பருவமழை காலங்களில் இந்த நடைப்பாலத்தில் மக்கள் நடந்து செல்லும்போது ஏதேனும் பெரிய அசம்பாவிதம் நடக்கும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.

Tags : British ,Thakur Kallanai River ,
× RELATED பிரிட்டன் இளவரசி கேத் மிடில்டனுக்கு புற்றுநோய் என அதிர்ச்சி தகவல்