அதிராம்பட்டினம், மே 1: திருவாரூர், காரைக்குடி புதிய அகல ரயில் பாதையில் அதிரை வழியாக சென்னைக்கு புதிய ரயில் இயக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிராம்பட்டினம் வழியாக செல்லும் திருவாரூர், காரைகுடி ரயில்வே சாலை மீட்டர்கேஜாக இருந்ததால் 5 ஆண்டுகளுக்கு முன் அதிரை வழியாக சென்னை சென்ற ரயில்கள் நிறுத்தப்பட்டது. பின்னர் அகல ரயில் பாதை அமைக்கும் பணி நடந்தது. திருவாரூரில் இருந்து காரைகுடி அகல ரயில் பாதை பணிகள் முடிக்கபட்டு கடந்த மார்ச் 29ம் தேதி பெங்களூர், திருச்சி போன்ற ஊர்கலிருந்து ரயில்வேதுறை அதிகாரிகள் அதிராம்பட்டினம் பகுதிக்கு வந்து புதிதாக அமைக்கப்பட்ட ரயில் நிலையத்தை பார்வையிட்டு அகல ரயில் பாதை வழிதடத்தில் ரயில் வெள்ளோட்டம் நடத்தினர். இதில் 110 கிலோமீட்டர் வேகத்தில் சிறப்பாக வெள்ளோட்டம் நடத்தி முடிக்கப்பட்டது. அப்போது இந்த ரயில் பாதையில் ஒரு மாதத்துக்குள் ரயில் சேவை துவங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.