×

சோளிங்கர் அருகே பரபரப்பு பட்டாசு குடோன் வெடி விபத்தில் சிறுவன் பலி வாலிபர் கவலைக்கிடம்

சோளிங்கர், மே1: சோளிங்கர் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிறுவன் பரிதாபமாக இறந்தான். மற்றொரு வாலிபர் கவலைக்கிடமாக உள்ளார்.வேலூர் மாவட்டம், வாலாஜாவை சேர்ந்தவர் சசிகுமார்(33). இவருக்கு சோளிங்கர் அடுத்த தொண்டமாநத்தம் கிராமத்தில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இதில் வாலாஜாவை சேர்ந்த சரவணன்(21) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று காலை பட்டாசு வெடி மருந்துகளை குடோனில் இறக்குவதற்காக சரவணன் சென்றார்.அப்போது அவரது நண்பர் சதீஷ்(16) என்பவரை உதவிக்காக அழைத்துச் சென்றார். இருவரும் பட்டாசு வெடி மருந்து பெட்டிகளை இறக்கிக் கொண்டிருந்தனர். அப்போது சதீஷ் வெடி மருந்துபெட்டியை வேகமாக வைத்ததாக தெரிகிறது. இதில் ஏற்பட்ட உராய்வில் பயங்கர சத்தத்துடன் வெடிபொருட்கள் வெடித்து சிதறியது. இதில் சம்பவ இடத்திலேயே சதீஷ் உடல் கருகி பரிதாபமாக இறந்தார். அருகிலிருந்த சரவணன் படுகாயம் அடைந்தார்.

அக்கம் பக்கத்தினர் சரவணனை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த சோளிங்கர் போலீசார் விரைந்து சென்று சதீஷின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தகவலறிந்த டிஆர்ஓ பார்த்தீபன், ராணிப்பேட்டை ஆர்டிஓ இளம்பகவத், அரக்கோணம் டிஎஸ்பி விஜயகுமார், வாலாஜா தாசில்தார் பூமா ஆகியோர் வந்து விசாரணை நடத்தினர். மேலும், சோளிங்கர் போலீசார் வழக்குப்பதிந்து பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர் சசிகுமாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டாசு குடோன் வெடி விபத்தில் சிறுவன் பலியான சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : cracker crackdown ,Sholingar ,
× RELATED சோளிங்கர் அருகே சிலிண்டர் வெடித்த...