×

துரைப்பாக்கம் எழில் நகரில் பூட்டிய வீட்டில் பெண் படுகொலை: கள்ளக்காதலன் கைது

துரைப்பாக்கம்: துரைப்பாக்கம் எழில் நகரில் பூட்டிய வீட்டுக்குள் பெண் தொழிலாளி கொலை செய்யப்பட்டார். துரைப்பாக்கம் எழில் நகரை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி மலர் (40). இவர்களது மகள் சசிகலா (23). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பழனி கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

இதன்பிறகு, மலர் கட்டிட வேலைகள் செய்து, மகளை வளர்த்து, திருமணம் செய்து வைத்தார். தற்போது சசிகலா திருவண்ணாமலையில் கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மலருக்கும், தேனாம்பேட்டையை சேர்ந்த கட்டிட மேஸ்திரி முருகன் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. மலரும், முருகனும் எழில் நகரில் உள்ள வீட்டில் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் மலர் வசித்த வீடு வெளிப்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதால், அக்கம்பக்கத்தினர் கண்ணகி நகர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து, கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மலர் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார்.

இதையடுத்து அவரது சடலத்தை போலீசார் கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மேஸ்திரி முருகனை கைது செய்தனர். விசாரணையில் கடந்த 26ம் தேதி மலரும், முருகனும் வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த முருகன் அம்மிக்கல்லை போட்டு மலரை கொலை செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

வாலிபரை கொல்ல முயற்சி

மாதவரம் அடுத்த மூலக்கடை அஞ்சுகம் நகரை சேர்ந்தவர் சாம்சன் (20). அதே பகுதியிலுள்ள பெட்ரோல் பங்க்கில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் மாலை பணியில் இருந்தபோது, 2 பைக்குகளில் வந்த 6 பேர், திடீரென சாம்சனை அரிவாளால் வெட்ட முயன்றனர். சுதாரித்துக்கொண்ட அவர், அங்கிருந்து தப்பி, மாதவரம் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, தப்ப முயன்ற 6 பேரை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில், வியாசர்பாடி சர்மா நகரை சேர்ந்த கார்த்திக் (20) என்பவரின் காதலி, தனது மொபட்டுக்கு பெட்ரோல் போடுவதற்காக வந்தபோது, அவரின் செல்போன் எண்ணை கேட்டு சாம்சன் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அந்த பெண் தனது காதலன் கார்த்திக்கிடம் கூறியுள்ளார்.

ஆத்திரமடைந்த கார்த்திக், தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ், பிரபாகரன், தேவா, குண்டு கார்த்திக், சுரேஷ் ஆகிய 5 பேரை அழைத்து வந்து, சாம்சனை வெட்டி கொல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட 6 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : house ,Kallakadalan ,town ,
× RELATED வெள்ளை மாளிகை கேட் மீது மோதிய கார் டிரைவர் பலி