திருப்பூர், ஏப்.30: திருப்பூர் ஆண்டிப்பாளையம் பகுதியில் பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றும் தொழிலாளி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை 5 மணி அளவில் டெய்லரின் மனைவி, வீட்டின் குளியலறையில் குளித்துக்கொண்டு இருந்தார். அப்போது, குளியலறையின் ஜன்னல் கம்பிகளுக்கு இடையே திடீரென்று வெளிச்சம் வந்துள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் அங்கு பார்த்தபோது செல்போன் மட்டும் தெரிந்தது. பின்னர், உடனடியாக அந்த பெண், மெதுவாக வெளியே சென்று தனது கணவரிடம் நடந்ததை கூறியுள்ளார்.
அதையடுத்து, டெய்லர் விரைந்து சென்று குளியலறை அருகே செல்போனுடன் நின்ற வாலிபரை மடக்கி பிடித்தார். அதைத்தொடர்ந்து சத்தம் போட்டதால் அருகில் இருந்தவர்களும் ஓடிவந்து அந்த வாலிபரை பிடித்து தர்மஅடி கொடுத்து திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், அந்த வாலிபர் திருப்பூர் ஆண்டிப்பாளையத்தை சேர்ந்த மனோஜ்குமார் (20) என்பது தெரியவந்தது. அவர், அதேபகுதியில் அந்த டெய்லர் வீடு அருகே வாடகை வீட்டில் தங்கியிருந்துள்ளார். இதனால், அங்குள்ள குளியலறை குறித்த விவரங்கள் அவருக்கு நன்கு தெரிந்துள்ளது. இதையடுத்து, மனோஜ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.