×

விளையாட்டு விடுதிகளில் சேர சிறுவர், சிறுமியர் விண்ணப்பிக்கலாம்

ஈரோடு, ஏப். 30: தமிழ்நாடு  விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளிகளில் படிக்கும் சிறுவர்,  சிறுமியர்களுக்கு விளையாட்டு துறையில் சாதனை படைப்பதற்கு ஏற்ப நல்ல  பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய 5 முதன்மை நிலை  விளையாட்டு விடுதிகள்  செயல்பட்டு வருகிறது. அதன்படி சிறுவர்களுக்கான  முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி சென்னை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய  இடங்களிலும், சிறுமியர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு விடுதி சென்னை,  ஈரோடு ஆகிய இடங்களிலும் செயல்பட்டு வருகிறது. இந்த முதன்மை விளையாட்டு  விடுதிகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளாக  உருவாகலாம். இதற்கென பள்ளிகளில் 6, 7, 8ம் வகுப்பு  பயிலும் சிறுவர்,  சிறுமியர்களுக்கு, மாநில அளவிலான தேர்வு மே 21ம் தேதி காலை 8 மணிக்கு  சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது. சிறுவர்களுக்கான  விளையாட்டு விடுதியில் தடகளம், இறகுப்பந்து, குத்துச்சண்டை,  ஜிம்னாஸ்டிக்ஸ், டென்னிஸ், நீச்சல் ஆகிய பயிற்சியும், சிறுமியர்களுக்கு  தடகளம், இறகுபந்து, மேசைப்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ் ஆகிய பயிற்சிகளும்  அளிக்கப்பட உள்ளது. விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வமுள்ள  மாணவ, மாணவியர்கள் 2019-20ம் ஆண்டிற்கான சேர்க்கைக்கு ஆன்லைன் மூலமாக  www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன்  மூலமாக 20ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். தேசிய மற்றும் மாநில  அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளையாட்டு  விடுதிகள் தொடர்பான விபரங்களை www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில்  தெரிந்து கொள்ளலாம். இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள கலெக்டர் கதிரவன்  கேட்டுக் கொண்டுள்ளார்.



Tags : game hostels ,girls ,boys ,
× RELATED பாபநாசம் வட்டாரத்தில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி முகாம்