சென்னிமலை. ஏப்.30: நெசவாளர்களுக்கு வழங்கப்படும் கூலியை ரூ. 1500 வரை ரொக்கமாக வழங்கவும், அதற்கு மேற்பட்ட தொகையை வங்கி மூலமாக பணம் பரிமாற்றம் செய்யவும் கைத்தறி துணி நூல் துறை முடிவு செய்துள்ளது.ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்களில் உள்ள நெசவாளர்களுக்கு 100 ரூபாய் நெசவு கூலியாக இருந்தாலும் அதனை வங்கி மூலம் தான் வழங்கப்படும் என்னும் உத்தரவை கைத்தறி மற்றும் துணி நூல் துறை நடைமுறைப்படுத்தியது. இதற்கு கைத்தறி நெசவாளர்கள எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தேர்தல் நேரத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு 50 ஆயிரம் நெசவாளர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் அமைந்தது. இது குறித்த செய்தி ஏப்.6 ல் தினகரன் நாளிதழில் வெளியிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கைத்தறி துணி நூல் துறை சார்பில் வெளியிட்ட அரசு உத்தரவில் தெரிவித்துள்ளதாவது: வாரம் ஒருமுறை கூலி வழங்கும் 612 நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களும், மாதம் இருமுறை கூலி வழங்கும் 102 நெசவாளர் கூட்டுறவு சங்கங்களும், நெசவு கூலியை வங்கி மூலமாக மட்டுமே பண பரிவர்த்தனை செய்யும் நடைமுறையை பின்பற்ற தேவையான நடவடிக்கை எடுக்க அனைத்து சங்க மேலாண்மை இயக்குனர்களுக்கும் அறிக்கை வழங்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து திருப்பூர், ஈரோடு, திருச்செங்கோடு சரகங்களில் சரக துணை உதவி இயக்குனர்கள் கலந்துகொண்டஆய்வு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களின் உறுப்பினர்கள் நகர்ப்புற வங்கிகளுக்கு சென்று, கூலி பெறுவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளதாகவும், கூலியை ரொக்கமாக வழங்குமாறு தொடர்ந்து கோரி வருவதால், நெசவாளர்களுக்கு வழங்கப்படும் கூலியை ரூ. 1500 வரை ரொக்கமாக வழங்கவும், அதற்கு மேற்பட்ட தொகையை வங்கி மூலமாக பணம் பரிமாற்றம் செய்ய கோரினார்கள். எனவே மேற்படி ஊரக உதவி இயக்குனர்கள் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு, சங்கங்களின் உறுப்பினர்களின் நலனை கருத்தில் கொண்டு, திருப்பூர், ஈரோடு, திருச்செங்கோடு நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கூலியை ரூ 1500 வரை ரொக்கமாகவும், அதற்கு மேற்பட்ட தொகையை வங்கி மூலம் பணப் பரிவர்த்தனை செய்யலாம் என கைத்தறி துணி நூல் இயக்குனர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இதனால் மேற்படி பகுதிகளில் 2 லட்சத்திற்கும் அதிகமான கைத்தறி நெசவாளர்கள் பயன்பெறுவார்கள். இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.