ஆம்பூர், ஏப்.30: ஆம்பூர் நகராட்சிக்கு வழங்கப்பட்ட பேட்டரி குப்பை வண்டிகள் தரமற்று இருப்பதால் அடிக்கடி உடைந்து விடுவதாக ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள பல்வேறு நகராட்சிகளில் துப்புரவு தொழிலாளர்கள் மூன்று சக்கர தள்ளு வண்டிகளில் குப்பை அகற்றி வருகின்றனர். இவர்களின் சிரமத்தை குறைக்கும் பொருட்டு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ₹1.80 லட்சம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் குப்பை வண்டிகள் வழங்கப்பட்டன. அதேபோல் ஆம்பூர் நகராட்சியில் முதல் கட்டமாக 28 பேட்டரி குப்பை வண்டிகள் வழங்கப்பட்டு குப்பை சேகரிக்க பயன்படுத்தபட்டு வருகின்றன. மேலும், 25 குப்பை வண்டிகள் இத்திட்டத்தின் கீழ் ஆம்பூர் நகராட்சிக்கு வழங்கப்பட உள்ளன.
இந்த வண்டிகள் போதிய தரத்திலான பொருட்களில் செய்யவில்லை இல்லை எனவும், பயன்படுத்த துவங்கிய சில நாட்களிலேயே வண்டிகளின் முன் சக்கர அச்சுக்கான இரும்பு ராடு உடைந்து விடுவதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும், வண்டிகள் திடீரென உடைவதால் சாலையில் விழும் ஆபத்து ஏற்படுவதாகவும், துப்புரவு தொழிலாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து நகராட்சி துப்புரவு அதிகாரி கூறுகையில், ‘போதிய பராமரிப்பு இன்றி இத்தகைய வாகனங்களை பயன்படுத்துவதால் தான் இவ்வாறு ஏற்படுகிறது. முறையாக பராமரித்து இயக்கினால் எந்த பாதிப்பும் ஏற்படாது’ என தெரிவித்தார்.