நாகை, ஏப்.30: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் நாகை மாவட்டத்தில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் 78 காவலர் மற்றும் 45 பட்டியல் எழுத்தர் உதவுபவர்கள் தற்காலிக பணியாளர்களாக பணியமர்த்தப்பட்டனர். இவர்களுக்கு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் நெல் கிடங்குகளில் பணிகள் மிக, மிக குறைந்த சம்பளத்தில் பணி வழங்கப்பட்டது. இந்நிலையில் நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தமிழநாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி புரியும் தற்காலிக பணியாளர்கள் பல்வேறு போராட்டங்களிடையே கடந்த மார்ச் மாதம் 4ம் தேதி ரேஷன் கடை எடையாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக நிரந்த பணி நியமன ஆணை பெற்றனர்.
இந்நிலையில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் பட்டியல் எழுத்தர் உதவுபவர்கள் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்களை சேமிப்பு கிடங்குக்கு அனுப்ப காலதாமதம் செய்யாததால் நிரந்த பணி நியமன ஆணை கிடைத்த பின்னரும் நிரந்த பணியில் சேர முடியாமல் குறைந்த சம்பளத்திலேயே பணியாற்றும் அவல நிலையில் உள்ளது. தற்போது நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணியாற்றுபவர்கள் பணியின் போது ஏற்பட்ட குறைபாடுகளுக்கு அரசுக்கு செலுத்த வேண்டியவை எதுவும் இல்லை என்று நிலுவைச்சான்று வழங்க வேண்டும்.
தற்போது நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்கள் சேமிப்பு கிடங்குகளுக்கு இடம் இல்லை, சவுக்கு மரங்கள் இல்லை, கருங்கல்கள் இல்லை என காரணம் காட்டி நெல் கொள்முதல்களை சுமார் ஒரு மாதத்திற்கு முன்பே நிறுத்திய நிலையில் நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்ககளுக்கு எடுத்து செல்லாமல் காலம் தாழ்த்தி வருவதால் பணி நிரந்தர நியமன ஆணை பெற்ற பின்னரும் இரண்டு மாதமாக குறைந்த சம்பளத்தில் தொடர்ந்து நாகை மாவட்டத்தில் மட்டும் 123 பேர் பணியாற்றி வருகின்றனர்.
நிரந்தர பணியில் வேலைக்கு சேர்ந்த நாட்களில் இருந்து அரசு ஊழியர்களுக்கான பல்வேறு சலுகைகள் கிடைக்க உள்ள நிலையில், தொடர்ந்து பணி நிரந்தரம் பெற்ற நிலையில் தற்காலிக பணியிலேயே குறைந்த சம்பளத்தில் பணியாற்றுவதால் அந்த ஊழியர்கள் மன கடுமையான மன உலைச்சலில் உள்ளனர். உடனே நிரந்தரம் பணி ஆணை வழங்கிய ஊழியர்களுக்கு தற்போதுள்ள பணியில் இருந்து விடுவித்து நிரந்தர பணியில் பணியாற்ற உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிப்புக்குள்ளாகியுள்ள ஊழியர்கள் எதிர்பாக்கின்றனர்.