லால்குடி, ஏப்.30: லால்குடி பஸ் நிலையத்தினை அரசு மற்றும் தனியார் பஸ்கள் போட்டி போட்டிக் கொண்டு புறக்கணிப்பதால் பயணிகள் சுட்டெரிக்கும் வெயிலில் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருச்சி மாவட்டம் லால்குடி பஸ் நிலையத்திற்கு திருச்சியிலிருந்து அரியலூர், ஜெயங்கொண்டம், சிதம்பரம், புதுச்சேரி, திருமானூர், தஞ்சை செல்லும் பஸ்கள் வந்து செல்லும். கடந்த சில மாதங்களாக ரவுண்டானா பணிகளால் பஸ் நிலையம் செல்லாமல் அவுட்டர் வழியாக சென்று வந்தன. இந்நிலையில் ரவுண்டானா பணிகள் முடிந்து போக்குவரத்து துறை அதிகாரிகள் வருவாய் துறை அதிகாரிகள் தனியார் மற்றும் அரசு பஸ்கள் பஸ் நிலையம் சென்று வர வேண்டும் என உத்தவிட்டனர்.
இதையடுத்து ஒருசில வாரங்கள் மட்டுமே பஸ்கள் உள்ளே வந்து பயணிகளை ஏற்றி சென்றனர். தற்போது பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் உள்ளே வரும் என எதிர்பார்த்து பயணிகள் காத்திருக்கும் நிலையில் திருச்சியிலிருந்து அரியலூர் பஸ்கள் மற்றும் புதுச்சேரி, ஜெயங்கொண்டம் பகுதியிலிருந்து திருச்சி நோக்கி செல்லும் பஸ்கள் மற்றும் அரசு எக்ஸ்பிரஸ் பஸ்கள் பஸ் நிலையத்தினை புறக்கணித்து ரவுண்டானா அவுட்டர் பகுதியிலேயே செல்கின்றன. இதனால் பஸ் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள் பல மணி நேரம் காத்திருந்தும் பஸ் வராததால் பிறகு அவுட்டர் பகுதிக்கு செல்கின்றனர். பயணிகள் தங்களது உடைமைகளை தூக்கிக் கொண்டு சுட்டெரிக்கும் வெயிலில் செல்வதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து தனியார் பஸ் டிரைவர்கள் கூறுகையில், அரசு பஸ்கள் எக்ஸ்பிரஸ் என சொல்லி பஸ் நிலையத்திற்கு வராமல் அவுட்டரில் செல்வதால் எங்கள் நேரத்தில் அரசு பஸ்கள் செல்கிறது. இதனால் எங்களுக்கு பாதிப்புள்ளாகிறது என கூறுகின்றனர். அரசு பஸ் டிரைவர்கள் கூறுகையில், எக்ஸ்பிரஸ் பஸ்களுக்கு கூடுதல் நேரம் இல்லாததால் வெளியே செல்லும் நிலை உள்ளதாக கூறுகின்றனர். பள்ளி மாணவ, மாணவியர் பயணிகளின் நலன் கருதி தனியார் மற்றும் அரசு பஸ்கள் போட்டி போட்டுக் கொண்டு அவுட்டரில் செல்வதை தவிர்த்து பஸ் நிலையம் வந்து செல்ல வேண்டும் என பயணிகள் பெரிதும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.