×

சிங்களங்கோம்பையில் விவசாய நிலத்தில் போர்வெல் அமைத்து தண்ணீர் விற்பனை

நாமக்கல், ஏப்.30:  நாமக்கல்லை அடுத்த சிங்களங்கோம்பையில், விவசாய தோட்டத்தில் போர்வெல் அமைத்து தண்ணீர் எடுத்து விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். இதுகுறித்து மனுவில் கூறியிருப்பது: நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்துள்ள சிங்களங்கோம்பை பகுதியில்,  300க்கும் மேற்பட்ட குடும்படுத்தினர் வசித்து வருகிறோம். இப்பகுதியில்  உள்ள சிலர், தங்களது விவசாய நிலத்தில் உள்ள போர்வெல் மூலம் தண்ணீரை எடுத்து  ஸ்பின்னிங் மில், செங்கல் சூளை, ஓட்டல் உள்ளிட்டவற்றுக்கு விற்பனை செய்து  வருகின்றனர். இதனால், எங்கள் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. தண்ணீர் டேங்கர் லாரிகள், டிராக்டர் மற்றும் லோடு ஆட்டோக்கள் மூலம் தண்ணீர் நிரப்பி கொண்டு செல்வதால் பஞ்சாயத்து போர்வெல்களில் தண்ணீர் வற்றிவிட்டது.

தண்ணீர் கொண்டு செல்லும் வாகனங்களை தடுத்தால், அதன் உரிமையாளர்கள் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பொட்டிரெட்டிப்பட்டி, கெஜக்கோம்பை, அலங்காநத்தம் மற்றும் போடிநாய்க்கன்பட்டி ஆகிய கிராமங்களில், தண்ணீர் எடுத்து விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது போல், சிங்களங்கோம்பையில் அறிவிப்பு பலகை வைத்து குடிநீர் மற்றும் விவசாயத்தை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.தொடர்ந்து, அப்பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு வந்து மனு அளித்தனர்.

Tags : farm land ,Sinhala Gangabai ,
× RELATED பாளம் பாளமாக வெடித்த விவசாய நிலம்...