திருவையாறு, ஏப்.28: திருவையாறு வட்டார மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் பயிர் அறுவடை செய்த நிலங்களில் கோடை உழவு செய்திட திருவையாறு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சரசு விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோடை உழவு அவசியம்:மண் வளத்தை அதிகரிக்கும். மண்ணில் நைட்ரஜன் நிலைப்படுவதால் அடுத்த சாகுபடிக்கான உரத்தேவையைக் குறைக்கும். நீரை நிலத்தில் தக்க வைக்கும், பூச்சித் தொல்லையைக் குறைக்கும், பெருமளவில் களைகள் கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் மண்ணரிப்பு தடுக்கப்பட்டு வயல்களிலேயே மழை நீர் சேகரிக்கப்படுவதால் நிலப்பரப்பின் கீழ் ஈரப்பதம் காத்து பூச்சி மற்றும் பூஞ்சான்கள் கட்டுப்படுகிறது.
கோடை உழவு செய்வதால் முன் பருவ விதைப்புக்கு ஏதுவாகிறது. உழுத வயலில் மறு உழவு செய்து விதைப்பது சுலபமாவதோடு, அடிமண் இறுக்கத்தை நீக்கி நீர் கொள்திறன் கூடுவதோடு விளைச்சல் அதிகரிக்கும். மேலும் மண்ணிற்கடியில் காணப்படும் கூட்டுபுழுக்கள் மேற்பரப்பில் தள்ளப்பட்டு பறவைகளுக்கு இரையாக்கப்படுகிறது.சுற்றுச்சூழல் பாதுகாப்பு:பயிர் பாதுகாப்பு நடைமுறைகளான களைக்கட்டுப்பாடு, பூச்சிக்கட்டுப்பாடு, மற்றும் நோய்க்கட்டுப்பாடு யாவும் செலவின்றி செயற்கை ரசாயனங்களின்றி கட்டுப்படுத்தப்படுவதால் ரசாயன பின்விளைவுகளான காற்று மாசுபடுவது, தண்ணீர் மாசுபடுவது, மற்றும் பிற உயிரினங்கள் பாதிக்கப்படுவது பெருமளவில் குறைக்கப்படுகிறது. உழவுக்கும் உழவனுக்கும் உறுதுணையாய் நின்று கோடை உழவு செய்து உழவுக்கு தோள்கொடுத்து உலகை காப்போம் என்று விசாயிகளுக்கு வேளாண்மை உதவி இயக்குனர் சரசு ஆலோசனை வழங்கியுள்ளார்.