கரூர், ஏப். 28: கருர் பயணியர் மாளிகை பின்புறம் உள்ள ராமகிருஷ்ணபுரம் சாலையில் மையத்தில் பாதாள சாக்கடை மூடி அருகே வைக்கப்பட்டுள்ள கற்களை விரைந்து அகற்றவேண்டும் என வாகனஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் வடக்கு பிரதட்சணம் சாலைப்பகுதியில் பயணியர் மாளிகை உள்ளது. இதனையொட்டி, ராமகிருஷ்ணபுரம் பகுதிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த பகுதியை சுற்றிலும் நூற்றுக்கணக்கான ஜவுளி நிறுவனங்கள் உள்ளதால் அடிக்கடி வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக பாதாள சாக்கடை பணிகள் நடத்தப்பட்டு, மேற்புரத்தில் புதிதாக சிமெண்ட் சிலாப் மூடி வைக்கப்பட்டுள்ளது. இந்த மூடியை சுற்றிலும் கற்கள் வைக்கப்பட்டுள்ளதால் இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே, மூடி நன்கு காய்ந்து தகுந்த நிலைக்கு வந்ததும், உடனடியாக அங்கு வரிசைக் கட்டி வைக்கப்பட்டுள்ள கற்களை விரைந்து அகற்ற வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.