×

பட்டா கத்திகளுடன் ரவுடிகள் அட்டகாசம்

அண்ணாநகர்: அரும்பாக்கத்தில் பட்டா கத்திகளுடன் ரவுடிகள் அட்டகாசத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை அரும்பாக்கம், ராதாகிருஷ்ணன் நகரில் நேற்று  முன்தினம் நள்ளிரவில் 4 வாலிபர்கள் மது போதையில், கையில் பட்டாக்கத்தியை வைத்துக்கொண்டு அப்பகுதியில் நடந்து சென்றவர்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை மிரட்டி தகராறு செய்தனர். இதனால், பொதுமக்கள் அலறி ஓட்டம் பிடித்தனர். பின்னர், இதுபற்றி அப்பகுதி மக்கள் அரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு போலீசார் வந்தனர். போலீசார் வருவதை பார்த்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று ஆய்வு செய்தபோது, அதே பகுதியே சேர்ந்த ஜெகன், அம்ரோஸ், ராஜேந்திரன் அவரது கூட்டாளிகள் என தெரியவந்தது. அவர்களை தேடி வருகின்றனர்.

இந்த பகுதியில் போலீசார் ரோந்துக்கு வருவது இல்லை என்றும், இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்டு சிலர் இரவு நேரங்களில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டி பணம் பறிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதுதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். அரும்பாக்கம் பகுதியில் சமீப காலமாக ரவுடிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே இரண்டு ரவுடிகள் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது இளம்ரவுடிகளின் அட்டகாசம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. எனவே இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்றும், அப்பகுதியில் போலீஸ் தீவிர ரோந்து பனியில் ஈடுபட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Ravidas ,
× RELATED பாமக எம்எல்ஏவின் மகன் காது கிழிப்பு