×

திருமயம் அருகே பாலம் கட்டுமான இடத்தில் எச்சரிக்கை பலகை நடப்பட்டது

திருமயம், ஏப்.26: திருமயம் அருகே  கட்டும் பாலம் கட்டுமான இடத்தில் முன்னெச்சரிக்கை பலகை தினகரன் செய்தி எதிரொலியால் நடப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், அரிமளம் பகுதியில் உள்ள மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள பழுதடைந்த பாலங்களை நெடுஞ்சாலை துறையினர் இடித்து தள்ளிவிட்டு புதிய பாலங்களை கட்டி வருகின்றனர். இதனால் பாலம் கட்டும் பணி நடைபெறும் இடத்தில் வாகன ஓட்டிகள் அவதிப்படமால் இருக்க இடிக்கப்பட்ட பாலத்தின் அருகே மாற்றுப்பாதை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் பாலம் கட்டும் பணி நடைபெறுவது மற்றும் மாற்று பாதை இருப்பதை வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்க அறிவிப்பு பலகை வைக்கவில்லை என வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டி வந்தனர். இதனால் கவனக்குறைவாக வரும் வாகன ஓட்டிகள் பாலம் கட்டும் பணிக்காக தோண்டப்பட்டுள்ள குழிக்குள் விழுத்து விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே நெடுஞ்சாலை துறை அலட்சியத்தால் திருமயம் பகுதியில் புதிய பாலம் கட்டும் பணியின் போதுஇரண்டு வாகன விபத்துகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

எனவே இனிமேலும் இது போன்ற விபத்துகள் நடைபெறாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி வாகன ஓட்டிகள் விடுத்த கோரிக்கை செய்தி நேற்றுமுன்தினம் படத்துடன் வெளியானது. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கையால் புதிய பாலம் கட்டும் இடத்தில் முன்னெச்சரிக்கை பலகை நேற்று முதல் வைக்கப்பட்டுள்ளது. எனவே செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழ் மற்றும்  நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு வாகன ஓட்டிகள், அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags : board ,bridge ,construction site ,Thirumai ,
× RELATED பெரம்பலூரில் மின்கம்பிகளை உரசிய மரக்கிளைகளை அகற்றும் பணி