×

துறையூர் அருகே லாரியை மறித்து டிரைவரிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு 7 பேர் கொண்ட கும்பல் போலீசாரிடம் சிக்கினர்

துறையூர், ஏப்.26:  துறையூரை  அடுத்த புலிவலம் அருகே இரவில் வந்த லாரியை வழிமறித்து டிரைவர் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பணம் பறித்த 7 பேர் கும்பல் போலீசாரிடம் சிக்கினர். மண்ணச்சநல்லூர் காமாட்சி நகரை சேர்ந்தவர் சந்திரசேகரன்  (32), டிரைவர். இவர் சேலத்தில் இருந்து நாமக்கல் வழியாக லாரியை ஓட்டிக்கொண்டு மண்ணச்சநல்லூர் சென்றுகொண்டிருந்தார்.  துறையூர் அடுத்த புலிவலம் அருகே கரட்டாம்பட்டி முருகன் கோயில் பகுதியில் டிரைவர் சந்திரசேகரன் வந்த லாரியை புதரில் மறைந்து இருந்த  7 பேர் கொண்ட கும்பல் மறித்தது. பின்னர்   டிரைவர் சந்திரசேகரன் கழுத்தில் கத்தியை வைத்தபடி அவர்கள் சூழ்ந்தனர்.  தொடர்ந்து லாரியில் எவ்வளவு பணம் உள்ளது என்று கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் கொடுக்காவிட்டால் கழுத்தை அறுத்து விடுவதாக கூறியுள்ளனர். இதைக்கண்டு பயந்த டிரைவர் சந்திரசேகரன்  தன்னிடம் பணம் எதுவும் இல்லை என்றும், சேலத்தில் லோடு இறக்கி விட்டு ஊருக்கு  வருகிறேன் என்றும் கூறியுள்ளார்.

தன்னிடம் ரூ.2,500 மட்டும்தான் உள்ளது என்று கூறியும்  கேட்காமல் 7 பேரும் டிரைவரை மிரட்டியுள்ளனர். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சிலர் இதைக்கண்டு கரட்டாம்பட்டி பொதுமக்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு வந்தனர்.
அதைக் கண்ட மர்ம நபர்கள் 7 பேரும் தங்கள் வைத்திருந்த இருசக்கர வாகனத்தில் தப்பியோடினர். அவர்களை பொதுமக்கள் விரட்டி சென்றபோது தப்பிச் சென்றவர்களில் இருவர் மட்டும் பகளவாடியில் சைக்கிளில் மோதி கீழே விழுந்தனர். இதில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரையும் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். இது குறித்து புலிவலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் வெகுநேரம் ஆகியும் சம்பவ இடத்திற்கு வராததால், பொதுமக்களே வழிப்பறியில் ஈடுபட்டவர்களை புலிவலம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.  போலீசாரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை ஒப்படைத்தனர்.

அப்போது இருவரையும் பிடித்து விசாரணை செய்ததில் பிரவீன் (21) கண்ணனூரை சேர்ந்தவர் என்றும், மற்றொருவர் சிவகுரு (22), இவரும் அதே ஊரைச் சேர்ந்தவர் என தெரியவந்தது. இவர்கள் இருவர் தந்த தகவலின்பேரில் தப்பிச் சென்றவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். கருணாகரன்  (21) மற்றும் ராஜதுரை  (19), மதிவாணன், ஜெயராமன்,  மணிகண்டன் ஆகிய 7 பேரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதும் அவர்களை  போலீசார்  கைது செய்து விசாரணை செய்தபோது, அவர்கள் கூறிய சம்பவம் போலீசாரை திடுக்கிட வைத்தது. விசாரணையில் இவர்கள் 7 பேரும் கண்ணனூர் மற்றும் சேனப்பநல்லூர் கெம்பியாம்பட்டி, கங்காணிப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள அய்யாற்றில் இரவு நேரங்களில் மணல் கொள்ளையில் ஈடுபடும் ஏஜென்ட்களிடம் இவர்கள் நள்ளிரவில் மணல் கடத்தி செல்லும் டிராக்டர் மற்றும்  லாரிகளுக்கு, அதிகாரிகள் மற்றும் போலீசார் நடமாட்டம் தெரிகிறதா, வருகிறார்களா என்று தகவல் கூறும் வேலையை செய்து வந்துள்ளதாக  கூறப்படுகிறது. இவர்கள் 7 பேரும்    3 முறை வழிப்பறி குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து ரூ.2,500  மற்றும் அவர்கள் வைத்திருந்த கத்தியையும் பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

Tags : group ,Thuraiyur ,
× RELATED திருத்தப்பட்ட ஆண்டு திட்ட அட்டவணையை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.