பள்ளிபாளையம், ஏப்.26: பள்ளிபாளையம் காவேரி ரயில் நிலையம் பகுதியைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளியின் 17 வயது மகள், அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்துவிட்டு தேர்வு விடுமுறையில் வீட்டில் இருந்து வந்தார். கடந்த 24ம் தேதி அதிகாலை 4.30 மணியளவில் மாணவியை திடீரென காணவில்லை. இதனால், திடுக்கிட்ட அவரது பெற்றோர் பல இடங்களிலும் தேடிப்பார்த்தனர். ஆனால், மகளைப்பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து, மாணவியின் தந்தை முருகன் பள்ளிபாளையம் போலீசில் புகார் தெரிவித்தார். அதில், தனது மகளை பக்கத்து வீட்டைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான மணிகண்டன் என்பவர் காதல் வார்த்தை கூறி கடத்திச்சென்று மறைத்து வைத்திருப்பதாகவும், சட்டப்படியான திருமண வயதை அடையாத மகளை மீட்டுத்தரும்படியும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பள்ளிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.