×

ஆழியார் அணைப்பகுதியில் ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள்.

பொள்ளாச்சி, ஏப்.25:  பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணைப்பகுதியில், ஆபத்தை உணராமல் குளிக்கும் சுற்றுலா பயணிகளை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்று தொடர்ந்து புகார் எழுந்துள்ளது. பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணைக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். ஆழியார் அணையை சுற்றி பார்க்க வரும் பயணிகள் பலர் ஆற்றோரம் உள்ள பாலத்தின் கீழ் பகுதி மற்றும் அணையை ஒட்டியுள்ள இடங்களில் குளிக்கின்றனர். இந்த இடங்களில் பயணிகள் குளிக்க தடை உள்ளது. ஆனால் ஆர்வம் மிகுதியால், சில சுற்றுலா பயணிகள் தடையை மீறி ஆழமான பகுதி மற்றும் மணல் நிறைந்த சேற்று பகுதியில் குளிப்பதால், சிலநேரத்தில் உயிர்பலி ஏற்படுகிறது.  தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால், ஆழியார் அணைக்கு வெளியூர் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் சிலர், தடை செய்யப்பட்ட பகுதி என்று தெரியாமல் ஆழியாற்றின் ஆழமான பகுதிக்கு சென்று விடுகின்றனர்.

சிலர் ஆழமான பகுதிக்கு சென்று செல்பி எடுத்து மகிழ்கின்றனர். தற்போது அணையில் நீர் மட்டம் சுமார் 63அடியாக உள்ளது. இருப்பினும் நீர்நிலையை பார்த்த ஆனந்தத்தில் குளிக்கும் சுற்றுலா பயணிகளின் உயிருக்கு உத்திரவாதம் இல்லாமல் போகிறது. உயிர்பலியை தடுக்க அணை பகுதி முழுவதும் கண்காணிப்பில் போலீசார் மற்றும் பொதுப்பணித்துறையினர் ஈடுபட வேண்டும் என்று, பல்வேறு அமைப்பினர் கோரிக்கை வைக்கின்றனர். ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.    மேலும், அணையின் மேற்பகுதி, பூங்கா, ஆழியாறு பாலம், குரங்கு அருவி, சுற்றுலா மாளிகை பின்பகுதி உள்ளிட்ட பல இடங்களில் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்ட எச்சரிக்கை போர்டுகள், இப்போது சிதிலமடைந்துள்ளது. இதில் அதிகபடியாக, அணையின் மேற்கு பகுதியில் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல், குழந்தைகளுடன் குளிப்பதை தொடர்ந்துள்ளனர். இதனால் விபரீத சம்பவம் நடக்க வாய்ப்புள்ளது. எனவே, ஆழியார் அணையில் உயிர் பலியை தடுக்கவும், விபரீத சம்பவத்தை தடுக்கவும், அங்கு வரும் சுற்றுலா பயணிகளை பாதுகாக்கவும் சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் முறையாக கண்காணிக்க வேண்டும். ஆழியார் அணைப்பகுதியில் குளிப்பதை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Aliyar Dam ,
× RELATED ஆழியார் அணையிலிருந்து பழைய ஆயக்கட்டுக்கு மீண்டும் தண்ணீர் திறப்பு