தா.பேட்டை, ஏப்.24: முசிறி மேலத்தெரு மாரியம்மன் கோயிலில் சித்திரை தேர் திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மாரியம்மனுக்கு தீர்த்த குடம் எடுத்தல், கரகம் பாலித்தல், சக்தி அழைத்தல், மாவிளக்கு எடுத்து தேங்காய் பழம் உடைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக மாரியம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடத்தப்பட்டது. பின்னர் சந்தனகாப்பு அலங்காரத்திலும் சிறப்பு மலர் அலங்காரத்திலும் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனைத் தொடர்ந்து திருத்தேரில் எழுந்தருளிய மாரியம்மன் முக்கிய வீதிகள் வழியாக சென்று அருளினார். திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். வரும் 30ம் தேதி காலை அக்னிகுழி, தீ போடுதல் நிகழ்ச்சியும், மாலை தீ மிதித்தல் விழாவும் நடைபெற உள்ளது.