×

கோட்டூர், குடவாசல், கொரடாச்சேரி ஒன்றியங்களில் பருத்தி செடிகளில் இலைப்பேன் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? ஆய்வு செய்த வேளாண்பேராசிரியர்கள் ஆலோசனை

மன்னார்குடி, ஏப்.25: கோட்டூர், குடவாசல், கொரடாச்சேரி ஒன்றியங்களில் பருத்தி சாகுபடி செய் யப்பட்ட வயல்களில் இலைப்பேன் தாக்குதல் அறிகுறி தென்படுவதால் வேளாண் பேராசிரியர்கள் ஆய்வு மேற் கொண்டு விவசாயிகளுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கினர். திருவாரூர் மாவட்டத்தில் 12 ஆயிரத்து 580 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக குடவாசல், கொரடாச்சேரி, திருவா ரூர், வலங்கைமான், கோட்டூர் ஒன்றியங்களில் அதிக அளவில் சாகுபடி செய்யப் படுகிறது.  இந்நிலையில் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ராம சுப்பிரமணியன் மற்றும் பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ராஜா ரமேஷ்  ஆகியோர் குடவாசல் வட்டாரத்திலுள்ள ராதாநல்லூர்  கிராமத்தில் பருத்தி வயலில் ஆய்வு செய்தனர். பின்பு பருத்தி வயலில் அசுவிணி மற்றும் இலைப்பேன் தாக்குதலின் அறிகுறிகள் தென்படுவதாகவும், அவற்றை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து தெரிவித்ததாவது:  அசுவிணியின் தாக்குதலால் இலை ஓரங்கள் கீழ்நோக்கி சுருண்டு கீழ் நோக்கிய கிண்ணம் போன்று காணப்படும். இலைப்பேன் தாக்குதலால் இலைகளின் அடிப்பாகத்தில் மிக நுண்ணிய வெண் புள்ளிகளும், சேதம் மிக அதிகமாக உள்ள போது இலைகள் மொர மொரப் பாகவும், மேல் நோக்கி வளைந்தும் காணப்படும்.

ஒருங்கிணைந்த முறைகளில்  கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:
மக்காச்சோளத்தை பருத்தி வயலை சுற்றி பயிரிடும் பொழுது சாறு உறிஞ்சும் பூச்சிகளுக்கு தடுப்புப் பயிராக அமைகிறது. வயல் வரப்புகளில்  தட்டைப் பயரை ஓரப் பயிராகப் பயிரிட்டு நன்மை செய்யும் பொறிவண்டு, கிரைசோ பிட் உள்ளிட்ட பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து சாறு உறிஞ்சும்  பூச்சி கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

உதிர்ந்த சப்பைகள், பூக்கள் மற்றும் காய்கள் ஆகியவற்றை கையால் பொ றுக்கி அழிப்பதன் மூலம் பூச்சிகளின் பெருக்கத்தைக் குறைக்க முடியும். மஞ்சள் நிறம் பூசப்பட்ட தகர டப்பாவின் மேல் ஆமணக்கு எண்ணெய் அல்லது கிரிஸ் தடவி ஏக்கருக்கு 10 என்ற விகிதத்தில் வைத்து வெள்ளை ஈ மற்றும் தத்துப்பூச்சியின் வளர்ந்த பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.தாவர பூச்சிக் கொல்லிகளான வேப்ப எண்ணெய் 2 சதம்  அதாவது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 மிலி அல்லது வேப்பங் கொட்டைக் கரைசல் 5 சதம் அதாவது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 50 மிலி என்ற அளவில் தேவையான அளவு ஒட்டும் திரவம் கலந்து 15 முதல் 20 நாட்களுக்கு ஒருமுறை தாக்கு தலின் தீவிரத்தைப் பொறுத்து தெளித்து கட்டுப்படுத்தலாம்

சாறு  உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த இமிடாகுளோபிரிட் 17.8 எஸ்.எல். - 50 மில்லி, தயாமீத்தாக்சாம்  25 டபிள்யூ.ஜி  - 40 கிராம், அசிட்டாமாபிரைட் 20 எஸ்பி.- 40 கிராம், குளோர்பைரிபாஸ் 20 ஈ.சி. - 500 மி.லி., பிப்ரோனில் 5 எஸ்.சி. - 800 மி.லி., புரபினோபாஸ் 50 ஈசி.- 400மி.லி., டைமெத்தோயேட் 30 ஈ.சி. - 200 மி.லி. ஆகிய ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளில் ஏதாவது  ஒன்றினை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் காலை அல்லது மாலை வேளைகளில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம் என்றனர்.  பயிற்சி உதவியாளர்கள் முனைவர்கள்  ராஜேஷ்குமார், வனிதா, விஜிலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : attack ,cotton plants ,Kudavasal ,Agricultural Research Associates ,
× RELATED போராட்டம் நடத்த இருந்த நிலையில்...