×

பெற்றோரிடமிருந்து பாதுகாப்பு கோரி: காதல் தம்பதி டிஜிபி அலுவலகத்தில் தஞ்சம்

திருமலை, ஏப்.25: பெற்றோரிடமிருந்து பாதுகாப்பு வழங்க கோரி காதல் தம்பதி டிஜிபி அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். சித்தூர் மாவட்டம், பூதலப்பட்டு மண்டலம், நாகிரெட்டிகாரி பல்லியை சேர்ந்த யுவராஜூம், பூதலப்பட்டை சேர்ந்த உஷாவும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வந்ததை அடுத்து யுவராஜின் பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். ஆனால் உஷாவின் பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. மேலும், தங்களது சொத்துக்காகவே யுவராஜ் தனது மகளை காதல் வலையில் விழ வைத்து திருமணம் செய்துகொள்ள முயற்சி செய்வதாகவும், தங்கள் பேச்சை மீறி திருமணம் செய்தால் யுவராஜை கொலை செய்து விடுவதாகவும் மகளை மிரட்டினராம்.

கடந்த 17ம் தேதி யுவராஜ் மற்றும் உஷா இருவரும் வீட்டில் இருந்து வெளியேறி கடப்பா மாவட்டம், ஜம்மலமடுகுவில் உள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த உஷாவின் குடும்பத்தினர் யுவராஜ், உஷாவை பல இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை விஜயவாடா டிஜிபி அலுவலகத்திற்கு சென்ற உஷா- யுவராஜ் தம்பதியினர் தங்கள் பெற்றோர்களால் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக்கூறி டிஜிபி அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : parents ,DGP ,
× RELATED பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்...