அருப்புக்கோட்டை, ஏப். 25: அருப்புக்கோட்டை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று திடீரென சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. மழை நின்று நீண்ட நேரமானாலும் மின்சாரம் விநியோகம் செய்யப்படவில்லை. இதேபோல் கிராமப்புறங்களில் பலமணி நேரம் மின்தடை ஏற்படுகிறது. மழைத்தூறல் விழுந்தவுடன் மின்சாரத்தை துண்டித்து விடுகின்றனர்.
நகரில் அடிக்கடி அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள், வியாபாரிகள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். மாலை நேரத்தில் திடீரென மழை பெய்வதால் மின்தடை ஏற்படுகிறது. இதனால் வீடுகள் மற்றும் ஓட்டல்களில் உணவு பண்டங்கள் தயார் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இதுகுறித்து மின்வாரியத்தில் கேட்டால் டிரான்ஸ்பார்மர்களில் ட்ரிப் ஆகி விடுகிறது என்ற காரணத்தை கூறுகின்றனர். எனவே நகர் மற்றும் கிராமப்புறங்களில் மழை காலங்களில் தொடர் மின்தடை ஏற்படுத்தாமல் சீரான மின்விநியோகம் செய்ய மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.